மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 6 தொழிலாளிகள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று (10) மதியம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.
இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகிய ஆண் ஒருவரும் , பெண் தொழிலாளர்கள் 5பேருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தொழிலாளிகள் தெரிவிக்கையில்,
தேயிலை பறித்துக்கொண்டிருந்த வேளையில் மரத்தில் இருந்த குளவி கூட்டை கழுகு தாக்கியமையால் இச்சம்பவம் இடம்பெற்றது.
அத்துடன் குளவி கொட்டு, அட்டை கடி மற்றும் சிறுத்தையின் தாக்குதல் தற்போது தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இதற்கு இதுவரை யாரும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்றும் அனைவரும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே வாக்குறுதிகளை வழங்கி செல்கின்றனர் என குற்றம் சாட்டினர்.
நாம் தற்போதைய சூழ்நிலையில் தமது உயிரை பணயம் வைத்து தொழிலுக்கு செல்ல வேண்டியதாக உள்ளது.
ஆகையால் தோட்ட நிர்வாகிகள் தோட்டப் பகுதியில் உள்ள குளவி கூடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.