சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் கைது!

1 13
1 13

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கி வந்த சட்டவிரோத துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நேற்று (11) தேசிய புலனாய்வு பிரிவினர் முற்றுகையிடப்பட்டு துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்ததுடன் 10 துப்பாக்கிகள் மீட்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம்  சம்பவதினமான  நேற்று ஞாயிற்றுக்கிழமை தேசிய புலனாய்வு பிரிவினர் திருக்கோவில் பிரதான வீதியிலுள்ள அம்மன் கோவிலுக்கு முன்னாள் இயங்கிவரும் லேத் மெசின் கடையினை முற்றுகையிட்டுள்ளனர் . அங்கு திரட் வகை உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த 60 வயதுடைய தம்பிலுவிலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர் .  

இதனையடுத்து குறித்த துப்பாக்கி தயாரிப்பான பட் எனப்படும்  பாகமான துப்பாக்கியின்  மரத்திலான பிடியை தயாரித்து வந்த  தச்சு தொழிலாளியான தம்பிலுவிலைச் சேர்ந்த 40 வயதுடைய முன்னாள் போராளியான ஒருவரையும், தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்த காஞ்சரம் குடாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்ததுடன் அங்கிருந்து தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கிகளையும் மீட்டுள்ளனர் .

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் திருக்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.