மட்டக்களப்பில் கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு, பட்டிப்பளை, மண்முனை மேற்கு ஆகிய கல்வி வலயங்களில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் சுகாதார வழி முறைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் நாடளாவிய ரீதியில் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று (12) ஆரம்பமானது.

அந்தவகையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பரீட்சை நிலையத்திற்கு வருகை தந்திருந்ததுடன், மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளைக் கழுவி பரீட்சை நிலையத்திற்கு செல்வதை காணமுடிந்தது.

மேலும் பரீட்சை நிலையங்களுக்கு சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிஸார் வருகை தந்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கியதுடன், சகல பரீட்சை நிலையங்களிலும் சுகாதாரப் பிரிவினர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கமைவாக மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பரீட்சையில் கலந்துகொண்டுள்ளனர்.

உயர்தரப் பரீட்சைகள் இன்று (12) ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

உயர்தர பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 2648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.