கொரோனா வைரஸின் மூன்றாவது அலைக்கு அரசே முழு பொறுப்பு -சமிந்த விஜேசிறி

விஜேசிறி
விஜேசிறி

இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஏற்பட்டதற்கான முழுப் பொறுப்பையும் அரசு ஏற்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, கொரோனா வைரஸைக்கூட அரசியலுக்காகப் பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி உலக நாடுகளுக்குப் பரவும் நிலையில் அது தொடர்பில் கடந்த டிசம்பர் மாதமே நாம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தோம். எமது கோரிக்கைக்கு செவிமடுத்திருந்தால் கொரோனா வைரஸ் நாட்டுக்குள் வருவதைத் தடுத்த நாடு என்ற பெருமை இலங்கைக்குக் கிடைத்திருக்கும்.

எனினும், குதிரை ஓடிய பிறகு லயத்தை மூடுவதுபோல்தான் கொரோனா விடயத்தில் அரசின் அணுகுமுறைகள் அமைந்தன. மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணிப் பரவலின் ஆரம்பப்புள்ளி எது என்பது தொடர்பில் அரசு இன்னும் அறிவிக்கவில்லை. எனவே, இனியாவது அரசு பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி இரண்டு மாதங்களாகக் கூடவில்லை எனக் கூறப்படுகின்றது. எனவே, ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் முதல் மேற்படி செயலணியில் இருந்த அனைவரும் இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.

தேர்தல் முடிவடைந்த பிறகு கூடவில்லையெனில் அதற்கு முன்னர் கொரோனா வைரஸைக்கூட அரசியலுக்காகவே இந்த அரசு பயன்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, நேரடி பதில்களை வழங்காமல் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் பற்றியே சுகாதார அமைச்சர் கதைத்தார். எனவே, இலங்கையில் இரண்டாவது முறையும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதற்கான பொறுப்பை அரசு ஏற்கவேண்டும்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. அதனை மறைப்பதற்கும் இன்று கொரோனா வைரஸ் பரவலைப் பயன்படுத்தி வருகின்றனர் ஆளுங்கட்சியினர்.

நாட்டு மக்களுடன் விளையாட வேண்டாம் என்பதுடன், அவர்களை பலிக்கடாக்களாக்கி அரசியல் நடத்த முற்பட வேண்டாம் எனவும் அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.