ரிஷாட் பதியுதீன் எவ்வித தவறுகளும் செய்யவில்லை- முஜாஹிர்

DSC 0242
DSC 0242

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாட் பதியுதீன் அவர்களை குறி வைத்து இந்த அரசாங்கம் அவரை பலி வாங்கிக் கொண்டு இருக்கின்றனர் என மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தெரிவித்தார்.

மன்னார் தனியார் விடுதியின் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(16) காலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளுராட்சி மன்ற பிரதி நிதிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

அரசியல் பலிவாங்கள் என்றால் கடந்த காலம் எல்லோறுக்கும் தெரியும். 52 நாட்கள் உதவி செய்யவில்லை என்ற காரணத்திற்காகவும்,மூன்று மாதம் அவர்களின் அரசியலுக்கு உதவி செய்யவில்லை என்பதற்காகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர் மீது சுமத்தி சிறுபான்மை சமூகத்தை அடக்க ஆழ வேண்டும் என்று தற்போதைய அரசாங்கம் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது.

இன்று பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீன் அவர்களை கைது செய்வதற்கு தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக நாங்கள் அறிகின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீன் அவர்கள் எவ்வித தவறுகளும் செய்யவில்லை.

வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு இடம் பெயர்ந்த மக்கள் பேரவை என்ற அமைப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அங்கு இருக்கின்ற மக்களை சொந்த மண்ணில் வந்து வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அந்த அமைப்பு புத்தளம் மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து கிராமங்களின் தலைவர்கள் ஊடாக கடிதங்களை பெற்று குறித்த கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு வழங்கி மன்னாரிற்கு செல்வதற்கான அனுமதியை வழங்கிய பின்னர் தான் அமைச்சர் மங்கள் சமரவீர அவர்கள் பணத்தை விடுவித்து தந்ததன் பின்னர் தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு புத்தளம் மாவட்டத்தில் இருந்து மக்களை மன்னாரிற்கு அழைத்து வந்த நிலையில் மக்கள் வாக்களிப்பை மேற்கொண்டனர்.

தேர்தல் முடிவடைந்து 6 தினங்களில் குறித்த அமைப்பு பணத்தை மீண்டும் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.

ஆனால் இன்று பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீன் மீது அரசியல் பலிவாங்கள் இடம் பெற்று வருகின்றது.

அவருடைய சகோதரர் றியாஜ் பதியுதீன் அவர்களை எவ்வித குற்றமும் இன்றி கடந்த 6 மாதங்கள் சிறையில் அடைத்து வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கி பல்வேறு முறைப்பாடுகளை பதிவு செய்தார்கள்.

எனினும் றியாஜ் பதியுதீன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்று அவர் விடுதலை செய்யப்பட்டார்.ஆனால் அரசியல் பலிவாங்கள் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் நூறு பேர் கையெழுத்து இட்டு மீண்டும் அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறிய போது முன்னாள் அமைச்சர் அவருக்கு பக்க பலமாக இருந்தார்.

றிஸாட் பதியுதீன் அவர்களை இல்லாமல் செய்ய வேண்டம் என்பதற்காக பல்வேறு சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

றிஸாட் பதியுதீன் அவர்கள் எந்த ஒரு பிழையும் செய்யவில்லை.அவரை நிம்மதியாக மக்கள் பணியை மேற்கொள்ள விடுங்கள்.

அவர் பிழை செய்திருந்தால் தண்டனை வழங்கப்பட வேண்டும்.ஆனால் அவர் எந்த ஒரு பிழையும் செய்யவில்லை.மக்களை சட்ட ரீதியாக வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

அதே வேளை மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் சந்தியோகு நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.