வவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 55 பேர் வீடு திரும்பினர்

20201018 074820
20201018 074820

வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த 55 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு இன்று (18) விடுவிப்பு செய்யப்பட்டுள்ளனர் .

வெளிநாட்டிற்கு தொழில் பெற்று சென்று நாட்டிற்கு திரும்ப முடியாமலிருந்த டுபாய், ஜோர்தான் நாடுகளிலிருந்து 105 பேர் அண்மையில் இலங்கைக்கு விஷேட விமானத்தில் அழைத்து வரப்பட்டு பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் .

இதில் இன்று 55 பேர் தங்களது தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்டு வெளியேறும் நிகழ்வு இன்று இராணுவத்தினரினால் எற்பாடு செய்யப்பட்டது . இவ்வாறு 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொண்ட கொழும்பு, கம்பஹா, மாத்தறை , பதுளை , மொனராகலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களே தனிமைப்படுத்தலை நிறைவு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டு வெளியேறியுள்ளனர் .

தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டின் நிலைமைக்கு முகங்கொடுக்கும் வகையில், அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும் அவர்களின் முயற்சிகளில் எங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும்  அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு நாம் நன்றி கூறுகின்றோம். வருங்கால புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கை மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அச்சமின்றி தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொள்ள முடியும் என்றும் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களில் நேற்று 50 பேர் விடுவிக்கப்பட்டிருந்தனர். இன்று மீதி 55 பேரும்  தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .