மத்துகம பகுதியிலுள்ள தனியார் வங்கி ஊழியருக்கு கொரோனா

6565
6565

மத்துகம பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி நிறுவனத்தின் சேவையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பிரிவின் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளது. இந்நிலையில மத்துகம பிரதேச செயலகத்தில் ஓவிட்டிகல, பதுகம, புதிய கொலனி ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த தினம் மத்துகம- கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்றின் சாரதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் அனுராதபுரத்துக்கு யாத்திரை மேற்கொண்ட 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

களுத்துறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தகவல்படி இதுவரையில் மத்துகம பிரதேசத்தில் மாத்திரம் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வெள்ளவத்தை பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றில் கடமையாற்றி வரும் ஊழியர் இருவர் மற்றும் அவர்களது தாயார் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரிவி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.