மாகந்துர மதூஷின் சடலத்தை மனைவியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

Makandure Madush
Makandure Madush

மாளிகாவத்தையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துர மதூஷின் சடலத்தை அவரது மனைவியிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற புதுக்கடை நீதிமன்ற நீதிவான், மரண விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். காவல் துறையினருக்கும் வேறு பாதாள உலக சந்தேக நபர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தின் போது மாகந்துரே மதூஷ் உயிரிழந்ததாக காவல் துறையினர் இன்று காலை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இறந்தவரின் மனைவி சடலத்தை நீதவான் முன் அடையாளம் கண்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் காவல் துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு காவல் துறை அதிகாரிகளும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.