வவுனியாவில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

IMG 20201022 WA0014
IMG 20201022 WA0014

வவுனியா ஜேசுபுரம் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் செயற்பாடு பொதுமக்களின் எதிர்ப்பினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா ஜேசுபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் அனுராதபுரத்திலிருந்து வருகை தந்ததாக தெரிவிக்கப்படும் நீர்பாசன திணைக்கள ஊழியர்கள் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக இயந்திரங்கள் மற்றும் குழாய்களை நேற்றையதினம் கொண்டு வந்திருந்தனர்.

அத்துடன் இன்றையதினம்(22) காலை குறித்த பகுதியில் உள்ள காணியில் குழாய் அமைக்கும் பணியினை செயற்படுத்த முனைந்தபோது அப்பகுதி மக்களால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது

ஏற்கனவே நிலத்தடி நீர் பற்றாக்குறையாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான பாரியளவிலான, குழாய்களை அமைப்பதற்கு நாம் அனுமதி வழங்கமாட்டோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்ததுடன், நீர் உறிஞ்சுவது நீரா?எம் உயிரா?,விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சாதே போன்ற பதாதைகளையும் பொதுமக்கள் இதன்போது ஏந்தியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களான கார்தீபன், உத்தரியநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் இணைப்பாளர் அலைக்ஸ், ரெலோவின் முக்கியஸ்தர் நாகராஜன் ஆகியோர் சென்று மக்களுடன் கலந்துரையாடியதுடன் இதனை நிறுத்துவதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தனர்.

எனினும் குழாய் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் அந்தவாகனங்கள் அவ்விடத்திலேயே தற்போதும் தரித்துநிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.