20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்து பிரதமரின் முதுகில் குத்திவிட்டனர் என்கிறார் அனுரகுமார

Anura Kumara Dissanayake 640x415 1
Anura Kumara Dissanayake 640x415 1

20 ஆம் திருத்தத்தை கொண்டு வந்து  நீதி அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கம் பிரதமரின் முதுகில் குத்திவிட்டதாக குற்றச்சாட்டிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக  மஹிந்த ராஜபக் ஷ எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் நிச்சயமாக 20ஐ எதிர்த்திருப்பர்  எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று 20 ஆம் திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

பிரதமரை முன் ஆசனத்தில் அமர வைத்துவிட்டு பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த நீதி அமைச்சர் அலி சப்ரி பிரதமரின் முதுகில் கத்தியால் குத்தியது போன்று நேற்று சில சம்பவங்கள் இடம்பெற்றது. இதைத்தான் முதுகில் குத்துவது என கிராமங்களில் கூறுவார்கள், அதனை நேற்று நான் நேரில் பார்த்தேன். அதே போல் 20 ஆம் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அதனை பாராளுமன்றத்தின் முழுமையான அங்கீகாரத்துடன் கொண்டுவரவில்லை. 

அரசாங்கத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை சாதகமாக பயன்படுத்தியே கொண்டுவரப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு கொண்டுவரப்பட்ட வேளையில் தான் இருந்திருந்தால் அரசியல் அமைப்பிற்கு எதிராக செயற்பட்டிருப்பேன் என பிரதமர் நேற்று சபையில் கூறினார். அதேபோல் இப்போது கொண்டுவந்துள்ள 20 ஆம் திருத்த சட்டத்திருத்தத்தின் போதும் அவர் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் நிச்சயமாக 20 ஆம் திருத்த சட்டத்திற்கு எதிராகவே செயற்பட்டிருப்பார்.

19 ஆம் திருத்தத்தில் குறைபாடுகள் உள்ளதை நாம் மறுக்க முடியாது, ஆனால் 19 அம திருத்தத்தின் மூலமாக ஜனநாயகத்தை பலப்படுத்தும் நோக்கம் இருந்தது. அதனை மேலும் பலபடுத்தியிருந்தால் நிச்சயமாக ஜனநாயகம் மேலும் பலமடைந்திருக்கும். 19 ஆம் திருத்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பலவீனமான காரணிகளை பலப்படுதுவோம் என இந்த அரசாங்கம் நினைத்திருந்தால் அது ஜனநாயகமாக கருதியிருக்க முடியும். 

இதேவேளை இரட்டைக் குடியுரிமை விடயம் அதிகளவில் பேசப்படும் விடயமாக உள்ளது. இதனை திருத்தத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றே கேட்கிறோம். அப்படி செய்ய முடியாவிட்டால் குறைந்தது அதில் திருத்தத்தை மேற்கொண்டு இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களுக்கு எமது பாராளுமன்றம், உள்ளுராட்சி மன்றங்கள், மாகாண சபைகளுக்கு செல்ல முடியாது என்று திருத்துங்கள். வேண்டு மென்றால் பஸில் ராஜபக்‌ஷவுக்கு அந்த சரத்துகள் பொருந்தாது என்று கூறிவிடுங்கள். எப்படியும் அது நடக்கத்தானே போகின்றது என குறிப்பிட்டுள்ளார்