வவுனியா கொரோனா தொற்றாளர்கள் சாவகச்சேரி, வல்வெட்டித்துறை, கிளிநொச்சியை சேர்ந்தவர்கள்!

Coronavirus Covid 19 696x392 2
Coronavirus Covid 19 696x392 2

வவுனியா, நெடுங்கேணி வீதி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறுநேற்று (சனிக்கிழமை) தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் எனவும் வடமாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.

யாழ்ப்பாணத்தில், சாவகச்சேரி மற்றும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

வவுனியா, பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் அறிவிப்பின்படி, “கடந்த 21ஆம் திகதி வவுனியா-நெடுங்கேணி வீதிச் சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் சிலரது மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. பதுளையைச் சேர்ந்த ஒருவர் உட்பட தென்னிலங்கையைச் சேர்ந்த மூவருக்கே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து. குறித்த மூவருடன் வவுனியா-நெடுங்கேணி வீதி சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட அனைவரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேலும் இருவருக்கு நேற்று முன்தினம் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் ஏழு பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் வல்வெட்டித் துறை, சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த மூவர் அடங்குகின்றனர். ஏனைய நால்வரில் இருவர் மாத்தளை, ஒருவர் ஹம்பாந்தோட்டை, மற்றையவர் பலாங்கொடையைச் சேர்ந்தவர்களாவர்.

இதனிடையே, யாழ்ப்பாணம், கிளிநோச்சியைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்தமையால் அச்சமடையத் தேவையில்லை. எனினும் அவர்கள் கடந்த ஒரு வாரத்தில் வைத்திருந்த தொடர்புகள் ஆராயப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது