மக்கள் பசியால் உயிரிழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை

download 4 6
download 4 6

அரசாங்கத்தின் அரசியல் இலாபம் கருதிய செயற்பாடுகளின் காரணமாக  கொரோனா வைரஸ்  பரவல் தீவிரமடைந்துள்ளதுடன், அரசாங்கத்தின் தொடர்ச்சியான கவனக் குறைவின் காரணமாக மக்கள் பசியால் உயிரிழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹூமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் போதிய வருமானமின்றி பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். ஏற்கனவே நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்திள்ளது. இந்நிலையில் மக்கள் வருமானமின்றி பொருட்களை கொள்வனவு செய்யவும் முடியாமல் இருக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் இருப்பதாக தெரியவில்லை.

ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் அரசியல் இலாபத்தை இலக்காக கொண்டே செயற்பட்டு வந்தது. அதனாலேயே நாட்டு மக்கள் வைரஸ் தொற்றின் காரணமாக சிக்கல்களை எதிர் நோக்கி வருகின்ற நிலையிலும் அரசாங்கம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளது.

வைத்திய நிபுணர்கள் வைரஸ் பரவல் தொடர்பில் எவ்வளவு ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுத்தாலும் ,அரசாங்கம் அது தொடர்பில் அக்கறைக் கொள்வதாக தெரியவில்லை. நாட்டில் இவ்வாறான நெருக்கடியான நிலைமையிலும் இன்னமும் அரசாங்கத்தினால் சுகாதார பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமிக்க முடியவில்லை. தங்களுக்கு அதிகூடிய அதிகாரம் கிடைக்கப்பெற்றால் நாட்டுக்கு தேவையான சேவைகளை செய்வதாக கூறினார்கள். தற்போது மக்கள் உணவின்றி உயிரிழக்க வேண்டி ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களை காப்பாற்றுவதற்காக இவர்களிடம் எந்த திட்டமும் இல்லை.