நாளை தொடங்குகிற யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக வியாபார பீடத்தின் ஆய்வு மாநாடு!

faculty2
faculty2

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக, வியாபார கற்கைகள் பீடத்தின் வருடாந்த ஆய்வு மாநாடு நாளை 26 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. வவுனியா – மன்னார் வீதி, பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீடத்தில், பீடாதிபதி கலாநிதி வை.நந்தகோபன் தலைமையில் இந்த ஆய்வு மாநாடு இடம்பெறவுள்ளதுடன், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சம நேரத்தில் சூம் செயலி மூலம் ஒன்லைனிலும் பங்குபற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வருடத்துக்கான ஆய்வு மாநாட்டில் வியாபார நிலைமாற்றத்தில் கீழைத்தேய – மேலைத்தேய இணைவு (Business Transformation: Merging the West and the East) என்ற கருதுகோளின் கீழ் 19 உப பிரிவுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. அதிதிப் பேச்சாளர்களாக மொரட்டுவ பல்கலைக்கழக வியாபார கற்கைகள் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.டபிள்யூ.எஸ்.பி. தசநாயக்க, ஆஸ்திரேலியாவின் மர்டொக் பல்கலைக்கழக தகவல் தொழில் நுட்பம், கணிதப் புள்ளிவிபரவியல் பேராசிரியர் தனியா மக் கில் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இரண்டாவது தமிழ்த் துணைவேந்தரும், இலங்கையிலுள்ள துணைவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் அமையத்தின் தலைவருமான சிரேஷ்ட பேராசிரியர் எஸ். ஏ. அரியதுரை பிரதம விருந்தினராகவும், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா சிறப்பு விருந்தினராகவும், வவுனியா வளாக முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரனும் கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்வுகளின் இணைப்பாளராக தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ. ருக்‌ஷன் செயற்படவுள்ளார்.