கொழும்பிலிருந்து மன்னாருக்கு வந்த பயணிகளுக்கு அவசர அழைப்பு!

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இன்று (27) வரை 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (27)காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மினுவாங்கொடை கொரோனா கொத்தணி ஆரம்பித்த பின்னர் மன்னார் பட்டித்தோட்டம் பகுதியிலும், பேலிய கொடை மீன் தொகுதி கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய இருவர் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய தினங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 2 கொரோனா தொற்றாளர்கள் கொழும்பிலிருந்து மன்னாரிற்கு வந்த போக்குவரத்து விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11.20 மணியளவில் கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த (ரத்னா ரவல்ஸ்) என்ற தனியார் பேரூந்தில் வருகை தந்து 21ஆம் திகதி புதன் கிழமை காலை 8.45 மணியளவில் மன்னார் பேரூந்து நிலையத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி இலங்கை அரச பேரூந்தில் பயணத்தை மேற்கொண்ட பயணிகள் மற்றும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேரூந்தான எச்.எஸ்.ரவல்ஸ் ஊடாக பயணித்த மக்களும் உடனடியாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் தொடர்பு கொள்ளவும்.

குறித்த பேரூந்துகளில் பயணித்த மக்கள் உடனடியாக 071-8474361 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தமது இருப்பிடத்தை தெரியப்படுத்திக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து இன்று வரை 995 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த 11 நபர்களும் கொரோனா தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட 11 பேரில் 2 பேர் சிகிச்சையின் பின்னர் இரனவல வைத்தியசாலையில் இருந்து தமது வீடுகளக்கு சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.