சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு எதிரான மனு மீதான தீர்ப்பு இன்று !

manivannan 2 1
manivannan 2 1

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பாளர்,ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி மணிவண்ணனை, யாழ்மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கான இடைக்காலத் தடை உத்தரவை, இன்று (28) வழங்குவதாக, யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம்நேற்று உத்தரவிட்டது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தேர்ந்து அனுப்பப்பட்ட வி.மணிவண்ணன், தமது பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதால், மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு அந்தக் கட்சி யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கேட்டுக்கொண்டது.

அதனடிப்படையில், வி.மணிவண்ணன் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவி வறிதாகியதாக, யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரால் மணிவண்ணனுக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தனது உறுப்புரிமை நீக்கத்தை சவாலுக்குட்படுத்தி, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சிறப்பு மனுவை தாக்கல் செய்தார்.

மனுவின் பிரதிவாதிகளாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகர் உள்ளிட்டோரைக் குறிப்பிட்டிருந்தார்.

தனது பதவி நீக்கத்தை சட்ட வலுவற்றதாக உத்தரவிடுமாறு கோரிய மனுதாரர், அதன் மீதான விசாரணை நிறைவடைந்து இறுதிக் கட்டளை வரும் வரை, அதற்கான இடைக்காலத் தடை உத்தரவை வழங்குமாறும் கோரியிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு, யாழ்ப்பாணம் மாவட்ட நீதவான் வி.இராமக்கமலன் முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரின் விண்ணப்பம் தொடர்பில் ஆராய்ந்து, இன்று அதற்கான இடைக்காலத் தடை உத்தரவு வழங்கப்படுமென்று உத்தரவிட்டு, வழக்கை நீதவான் ஒத்திவைத்தார்.