யாழ்.வடமராட்சியில் முன்னணி மீன் ஏற்றுமதி மையம் முடக்கம்!

யாழ்ப்பாணம் வடமராட்சியிலிருந்து பெருமளவு மீன் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகின்ற எம்.டபிள்யூ மீன் ஏற்றுமதி நிறுவனத்தின் பருத்தித்துறை மையம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அதற்கு முத்திரை வைக்கப்பட்டு இராணுவப் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வடமராட்சியின் பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறையிலிருந்து பேலியகொடவிற்கு பெருமளவான மீன் ஏற்றுமதி குறித்த நிறுவத்தினால் முன்னெடுக்கபட்டுவருவது வழமை.

நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் அடையாளம் காணப்பட்ட மூவரும் குறித்த தொழிற்சாலையிலிருந்தே பேலியகொடவிற்கு சென்று திரும்பியிருக்கின்றனர்.

இந்நிலையில் எம்.டபிள்யூ என்ற குறித்த நிறுவனத்தின் ஐஸ் உற்பத்தி நிலையம் மற்றும் வாகனங்கள் உள்ளடங்கலாக அனைத்தும் பயன்படுத்தமுடியாத நிலையில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதேவேளை குறித்த நிறுவனத்தில் பணி செய்தவர்கள், தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பில் தகவல் திரட்டும் நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.