பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சி தோல்வியடையவில்லை

cvk
cvk

தமிழ்த் தேசிய வரலாற்றில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட முயற்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து உருவாக்கிய 13 அம்சக் கோரிக்கைகளும் தொடர்ந்தும் வலுவாகவே இருக்கும். பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சி தோல்வியடையவில்லை என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சி தொடர்பில் பல கருத்துக்களை வெளியாவது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துக்களை பகிரும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி தேர்தலில் தமிழக் கட்சிகளை ஒன்றிணைத்து பொதுக் கோரிக்கையை முன்வைக்க எடுத்த முயற்சி தோல்வியடைந்து விட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் என்னுடைய பார்வையில் அந்த முயற்சி தோல்வியடையவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டுக்குள் வரவேண்டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சி எடுத்தனர். அதில் கலந்து கொண்ட தேசியம் சார்ந்த ஆறு கட்சிகளும் இணைந்து 13 அம்சக் கோரிக்கைகளை உருவாக்கியிருந்தோம். எனினும் துரதிஷ்டமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 14 ஆவது கோரிக்கையாக இடைக்கால வரைபை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டுவந்தனர். இந்நிலையிலேயே அவர்கள் கூட்டிலிருந்து வெளியேறினார்.

எனினும் ஐந்து தமிழ்க் கட்சிகளும் கையொப்பம் இட்ட கோரிக்கைகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஏற்றிருந்தது. எனவே இதனை ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டு என்பதை விட ஆறு தமிழ்க் கட்சிகளும் இணைந்தே கோரிக்கையை தயாரித்தது எனலாம்.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் முதல்முறையாக தேசியத்தை வலியுறுத்தும் ஆறு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கைகளை ஆவணப்படுத்தியுள்ளமை வரலாற்றுப் பதிவு என்றே நான் கருதுகின்றேன்.

ஆகவே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சி வெற்றியென்றே கூற வேண்டும். மாணவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளும் தொடர்ந்து வலுவாகவே இருக்கும். இந்த கோரிக்கைகளை முழுமையாகவோ பகுதியாகவோ அரசியல் கடசிகள் பின்தொடரலாம். அவற்றை செயற்படுத்தலாம். அதில் உள்ள அனைத்தையும் நிறைவேற்றாது போனாலும் பலவற்றை நிறைவேற்றலாம்.

ஆகவே இது தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கடசிகளுக்கும் முக்கிய ஆவணமாகவே இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.