ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று!

20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று எட்டப்படவுள்ளது.

இன்று (09) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தின்போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்களை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் பகுதியில் ஒதுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அது குறித்த இறுதி தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பங்காளிக் கட்சிகளின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அந்த கட்சிகளின் தலைவர்களிடம் விளக்கம் கோர ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

அது குறித்து இந்த வாரம் எழுத்து மூலம் விளக்கம் கோரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் தலைவர்களாக செயற்படும் 3 அரசியல் கட்சிகளின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரான டயானா கமகேவும் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில் அவருக்கு எதிராக ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.