பனைசார் உற்பத்திப் பொருட்களை இணைய வழியில் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

பனை அபிவிருத்தி சபையினால் உற்பத்தி செய்யப்படும் பனை சார் உற்பத்திப் பொருட்களை பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறு இணையவழி மூலம் பெற்றுக்கொள்ளும் புதிய வேலைத்திட்டம் இன்று (09) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜ தெரிவித்தார் .

யாழ்ப்பாணத்திலுள்ள பனை அபிவிருத்தி சபையின் தலைமை காரியாலயத்தில் வீடுகளில் இருந்தவாறு பனை உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்யும் புதிய வேலைத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

இன்றைய தினம் பனை அபிவிருத்தி சபை புதிய யுகத்தில் காலடி வைக்கின்றது.

பனை அபிவிருத்தி சபையினால் சாதாரண விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுமுகமாக வடபகுதி உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பனை அபிவிருத்தி சபையினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை தற்போது கொரோனா தாக்கத்தின் காரணமாக பொதுமக்கள் எமது விற்பனை நிலையங்களில் வந்து கொள்வனவு செய்யாது தமது வீடுகளில் இருந்தவாறு இணையவழி மூலம் ஓடர் செய்து வீட்டிற்கு பெற்றுக் கொள்ளும் புதிய திட்டம் ஒன்றினை ஆரம்பித்து வைத்துள்ளோம்.

குறிப்பாக பனை அபிவிருத்தி சபையின் பனைசார் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளில் உள்ளவர்களும் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் எமது அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றது.

அதன் முதற்கட்டமாக இலங்கையில் உள்ளவர்கள் வீடுகளில் இருந்தவாறு பனை உற்பத்திப்பொருட்கள் பெற்றுக்கொள்வதற்கான திட்டமே இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த திட்டமானது மேலும் விரிவாக்கப்பட்டு இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்கள் பனை உற்பத்திப் பொருட்களை வீடுகளிலிருந்து மிகவும் மலிவான முறையில் பெற்றுக்கொள்ளும் திட்டமாக இது அமையும்.