மட்டக்களப்பு வாழைச்சேனையில் தொடர்ந்து நீடிக்கும் ஊரடங்கு – கருணாகரன்

batti ga 696x409 1
batti ga 696x409 1

மட்டக்களப்பு வாழைச்சேனையில் கொரோனா அதிகரிப்பையடுத்து அங்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தியில் மீண்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து வாழைச்சேனை காவல்துறை பிரிவில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா மைய காரியாலயம் மாவட்ட செயலகத்தில் இன்று (09) அரசாங்க அதிபரினால் திறந்துவைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் இதுவரை 48 பேர் பி.சி.ஆர். பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து ஏற்கனவே வாழைச்சேனை காவல்துறை பிரிவில் தனிமைப்படுத்தும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து வருகின்றது.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய இந்த பகுதியில் தொடர்ந்து தனிமைப்படுத்தும் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது

எனவே இந்த பகுதி மக்கள் பீதியடையாமல் எவ்வாறு இன்றுவரை இருந்தார்களோ அவ்வாறே தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இதேவேளை இராணுவத்தினர், சுகாதாரப்பிரிவினர் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா மையத்தை மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்திருக்கின்றோம்.

இந்த மையத்தில் மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அனைத்து தகவலும் உடனுக்குடன் மையத்திற்கு வந்தடையும். அந்த தகவல்களை உரிய பிரதேச சுகாதார பணிமனைகளுக்கும், பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் உடனுக்குடன் வழங்கப்படுவதுடன் இந்த மையம் 24 மணிநேரமும் தொடர்ந்து இயங்கும். குறித்த மையத்துடன் தொடர்பு கொள்ள 065 2226874 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளமுடியும்.

இதேவேளை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு 144.3 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு அந்த நிவாரணங்கள் வழங்கி முடியம் தறுவாயில் உள்ளது. ஆனால் மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா நீடித்துவருவதால் மேலும் நிவாரணம் வழங்க 13 மில்லியன் ரூபா தேவையாகவுள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்திம் கடந்த வெள்ளிக்கிழமை கோரியுள்ளோம் நிதி கிடைத்ததும் நிவாரணம் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.