முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான மாங்குளம் பொதுச்சந்தை வளாகம் சுகாதார சீர்கேடுகள் உடன் இயங்கி வருவதாகவும் குறித்த இடத்தில் நுளம்பு பெருகி நோய்கள் ஏற்படக் கூடிய அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் இந்நிலைமையினை உடனடியாக சீர் செய்வதற்கு பிரதேச சபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான மாங்குளம் பொதுச் சந்தை வளாகத்தில் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கி நிற்பதால் அங்கு நுளம்புகள் உற்பத்தியாக கூடிய சூழல் காணப்படுவதோடு அங்கு குப்பைகள் உரிய முறையில் அகற்றப்படாது கிடைப்பதாகவும், நீர் தேங்கி நிற்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் நோய்கள் பரவக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும், வர்த்தக நிலையங்களில் சென்று சுகாதார நடைமுறைகளை பார்வையிட்டு பல்வேறு குற்றச் சாட்டுக்களை வைத்து நடவடிக்கை எடுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இவ்வாறு மக்களுக்கு பல்வேறு ஆபத்தாக உள்ள குறித்த பகுதியை துப்பரவு செய்பவர்கள் மீது எந்தவிதமான ஆலோசனை கூறுவது இல்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்
மிக விரைவாக நீர் தேங்கி நிற்காது நீர் வடிந்தோட கூடிய வகையிலும் உரிய செயற்பாடுகளை மேற்கொண்டு சுகாதாரமான முறையில் இயங்குவதற்கு நடவடிக்கை புதுக்குடியிருப்பு பிரதேச மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
அத்தோடு குறித்த பொதுச்சந்தை வளாகத்தில் 58 லட்சம் ரூபாய் செலவில் வடமாகாண சபையினால் அமைக்கப்பட்ட பேரூந்து தரிப்பிடம் இன்று வரை சுமார் இரண்டு வருடங்களாக இயங்காத நிலையில் காணப்படுவதாகவும் புதிய பேருந்து நிலையத்தை அமைத்து விட்டு அந்த இடம் வெறிச்சோடி காணப்படுவதாகவும் குறித்த பேரூந்து நிலையத்தின் சேவைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.