அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மீண்டும் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப் குழுவின் தலைவர் சரித ஹேரத் இதனை தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக கோப் குழுவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு நாளை முதல் மீண்டும் கூடவுள்ளதாக அதன் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாளைய தினம் இடம்பெறவுள்ள கோப் குழுவின் கூட்டத்துக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, நெடுஞ்சாலைகள் அமைச்சின் கணக்காளர், நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய திட்ட முகாமைத்துவ பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் கணக்காளர், சம்பந்தப்பட்ட திட்டப் பிரிவின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட 7 அதிகாரிகளுக்கு மாத்திரம் நாளைய தினம் நாடாளுமன்றத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான சாத்தியக்கூற்று ஆய்வு மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பில் கோப் குழுவில் ஆராயப்படவுள்ளதாக அதன் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.