புட்டை சாப்பிட்டு கொண்டிருந்த வடக்கு மக்களை பீட்சா சாப்பிட வைத்தோம் – பிரசாத் பெர்னாண்டோ

IMG 20201120 230908 1
IMG 20201120 230908 1

போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என்று யாழ்ப்பாணம் தலைமையகப் காவல்துறை பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் மன்றுரைத்தார்.

அவரது கருத்துக்கு கடும் ஆட்சேபனை வெளியிட்ட சட்டத்தரணிகள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையை மீறி வடக்கு மாகாண மக்களை இழிவாகப் பேசுகிறார் என்று குறிப்பிட்டார்.

இதனையடுத்து காவல் நிலைய பொறுப்பதிகாரியைக் கண்டித்த மன்று, அவரைக் கட்டுப்படுத்தியது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயத்திக்கத்துக்குள் இன்று தொடக்கம் 29ம் திகதிக்கு இடையே இலங்கை குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 106ம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை என்ற வியாக்கியனத்தின் கீழ் விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறையினர் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வழக்கிலேயே யாழ்ப்பாணம் தலைமையகப் காவல் நிலைய பொறுப்பதிகாரி, தலைமைப் காவல் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ, தனது சமர்ப்பணத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும்,

உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு வருடாந்தம் 365 நாள்கள் உள்ளன. ஏன் நவம்பர் 21ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை மட்டும் நினைவுகூர வேண்டும். விடுதலைப் புலிகள் அமைப்பினால் கூறப்பட்டதனால்தான் அந்த வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது என்று குறிப்பிட்ட யாழ்ப்பாணம் தலைமையகப் காவல் பொறுப்பதிகாரி, தியாக தீபம் திலீபன் உள்ளிட்டோருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நினைவேந்தல் நடத்திய ஒளிப்படப் பிரதியை சான்றாக முன்வைத்தார்.

அதில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காணப்படுவதால் அவருக்குதான் காவல்துறையினர் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும், ஏன் எங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்கின்றனர் என்று சட்டத்தரணி கேள்வி எழுப்பினார்.