மாவீரர் நாள் நினைவேந்தலை கடைப்பிடிக்க முற்பட்ட புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வரான அருட்தந்தைக்கு எதிராக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தல் என்ற வியாக்கியனத்தின் கீழ் குற்றச்சாட்டை முன்வைத்து யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
நாட்டில் பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னங்கள், படங்களை காட்சிப்படுத்தி அந்த அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த போதும் சாதாரண குற்றிவியல் சட்டத்தின் அருட்தந்தையை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்தன.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாண ஆயர் இல்லத்துக்கு அருகில் உள்ள புனித மருத்தினார் குருபீடத்துக்கு முன்பாக அவர் இன்று மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
இளவாலையைச் சேர்ந்தவரும் புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வருமான அருட்தந்தை பாஸ்கரனே இவ்வாறு யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக தீப்பந்தங்கள் அலங்கரித்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
அருட்தந்தையை தற்போது யாழ்ப்பாணம் காவல்துறை நிலையத்தில் தடுத்துவைத்து வாக்குமூலம் பெறப்படுகிறது.