லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் வடக்கு மாகாணம் சார்பில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியின் தொடர்பாடல் அதிகாரியாக செயற்பட்ட யோகேந்திரன் ரதீபனை கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள யங்ஸ் ஸ்டார் விளையாட்டு கழகத்தில் இன்று (20.12.2020) காலை 11.00 மணியளவில் நடைபெற்றிருந்தது.
யோகேந்திரன் ரதீபனுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து கௌரவிப்பு இடம்பெற்றதுடன் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
யங்ஸ் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச, அரசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.
அந்த தொடரில் யாழ்ப்பாணத்தை பிரதிநிதுவப்படுத்தும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இறுதி போட்டியில் அபார வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.