உலகின் மிக வயதான நபரான 118 வயதுடைய ஜப்பானைச் சேர்ந்த மூதாட்டி கொவிட்-19 அச்சங்கள் காரணமாக 2020 டோக்கியோ ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் பங்கெடுப்பதை தவிர்த்துள்ளதாக அவரது மருத்துவர்கள் குழு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கின்னஸ் உலக சாதனை பெற்ற கேன் தனகா, மே 11 ஆம் திகதி புகுயோகாவில் தொடங்கும் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் பங்குகொள்ளும் ஒருவராக நியமிக்கப்பாட்டார்.
எனினும் தற்சமயம் நிலவும் கொவிட்-19 அச்சம் காரணமாக அவரது குடும்பத்தாரின் ஆலோசனைக்கு அமைவாக கேன் தனகா ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் பங்கொள்ளாமல் விலகவுள்ளதாக மருத்துவர்கள் குழுவினர் கூறியுள்ளனர்.
மார்ச் மாதத்தில் ஆரம்பமான 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான சுடர் ஓட்டம் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ளது.
சுடர் ஓட்டத்துக்கு உதவிய ஆறு பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.
சுடர் ஓட்டத்தில் பங்கேற்கவிருந்த சில பிரபலங்கள் தொற்றுநோய்க்கு மத்தியில் பாதுகாப்பு காரணங்களுக்காக விலகியுள்ளனர்.
தொற்றுநோய்களின் மீள் எழுச்சியைக் கட்டுப்படுத்த டோக்கியோ மற்றும் ஒசாகாவிற்கு கொவிட்-19 அவசரகால நிலையை ஜப்பான் கடந்த மாதம் அறிவித்தது.
இந்த அவரசகால நிலை விரிவாக்கத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக யோமியூரி செய்தித்தாள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.