ஐ.சி.சி.யின் 3 முக்கிய உலகக் கிண்ண போட்டிகளை நடத்த தயாராகும் இலங்கை

61684
61684

2024 – 2031 வரை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் நடத்தும் மூன்று முக்கிய உலகக் கிண்ண போட்டிகளை இலங்கை நடத்த ஏலம் கோருவதற்கு ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

மே 20 இலங்கை கிரிக்கெட் தேர்தலில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷம்மி சில்வா தலைமையிலான செயற்குழுவின் புதிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 18 ஆம் திகதி நடைபெற்ற செயற்குழுவின் அமர்வின் போது, இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சி குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தி மேலும் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

19 வயதுக்குட்பட்ட இளைஞர் அணிக்கான பயிற்சி முகாம், ‘ஏ’ மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு நிதியளித்தல் போன்ற முடிவுகள் எட்டப்பட்டன.

அதேசமயம் 2024 – 2031 வரை நடைபெறவுள்ள ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணம், ஆண்கள் ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை நடத்த ஏலம் எடுக்க இலங்கை கிரிக்கெட் எதிர்பார்த்துள்ளது.

சில நேரங்களில் ஏலம் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுடன் கூட்டு முயற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.