இருபதுக்கு20 உலகக்கிண்ண இலங்கை கிரிக்கெட் குழாமில் மேலும் ஐவர்!

sri lanka cricket
sri lanka cricket

இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் மேலும் 5 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது.

அதன்படி, பெத்தும் நிசங்க, மினோத் பானுக, அஷேன் பண்டார, லக்ஷான் சந்தகேன் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இருபதுக்கு20 உலகக்கிண்ணத்துக்கான 19 பேர் கொண்ட இலங்கை குழாமில் மேலதிக ஐந்து வீரர்களை சேர்த்துக்கொள்ள ஸ்ரீங்கா கிரிக்கெட் தேர்வு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, தசுன் ஷானக்க தலைமையிலான உலகக்கிண்ண இலங்கை அணியில் உள்ளடங்கும் வீரர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் நியதிக்கமைய, உலகக்கிண்ண கிரிக்கெட் குழாமில் உள்ளடங்கும் வீரர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 15 ஆக இருக்க வேண்டும்.

எனினும், தற்போதைய கொவிட் தொற்று நிலையின் காரணமாக, மேலதிக 4 பேரை அணியில் இணைக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.

எவ்வாறாயினும்,  அவசரநிலை அல்லது தேவை ஏற்பட்டால் மேலதிக வீரர்களைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டிய தேவை தொடர்பில் கிரிக்கெட் தெரிவுக்குழாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தது.

இதனைப் பரிசீலித்ததன் பின்னர் மேற்படி ஐவரும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக ஓமானுடன் நடைபெறவுள்ள இரண்டு இருபதுக்கு20 போட்டிகளில் விளையாடுவதற்காக,  இலங்கை குழாம் நாளை மறுதினம்(3) ஓமானுக்குப் புறப்படவுள்ளது.

தென்னாப்பிரிக்காவுடனான போட்டியின்போது கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகச் சகலதுறை வீரர் லஹிரு மதுஷங்க உலகக்கிண்ண குழாமிலிருந்து விலகியுள்ளார்.