14 ஆவது ஐ.பி.எல். சுற்றில் யாருக்கு வாய்ப்பு?

IPL 2021 complete squads 1260x657 copy
IPL 2021 complete squads 1260x657 copy

14 ஆவது ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டியின் ‘பிளே ஓப்’ சுற்றுக்கு சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 3 அணிகள் முன்னேறியுள்ள நிலையில் மீதமுள்ள ஒரு இடத்துக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், நடப்புச் சம்பியன் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் முட்டி மோதுகின்றன.

கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 12 ‍போட்டிகளில் 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றியீட்டியது.

14 ஆவது ஐ.பி.எல். போட்டியின் முதல் பாகம் இந்தியாவில் நடைபெற்றிருந்ததுடன், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டாவது பாகம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், லீக் சுற்றின் நிறைவில் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அடுத்த சுற்றான பிளே ஓப் சுற்றுக்குத் தகுதி பெறும்.

தற்போது 49 போட்டிகள் நிறைவில் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் ரிஷாப் பாண்ட் தலைமையிலான டெல்லி கெப்பிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 12 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளை பெற்றுள்ளன.

இதில் சென்னை டெல்லியை விட நிகர ஓட்ட சராசரியில் சிறந்து விளங்குவதால் முதலிடத்தில் உள்ளதுடன், டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது.

விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 போட்டிகளில் 8 வெற்றிகளையீட்டி 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளன. இதில் இந்த மூன்று அணிகளுமே முதலிரண்டு இடங்களைப் பிடிக்க முயற்சிக்கும்.

நான்காவது அணியாக பிளே ஓப் சுற்றுக்கு செல்வதற்கு கொல்கத்தா அணிக்கே அதிகப்படியான சாத்தியம் காணப்படுகின்றன.

ஏனெனில், கொல்கத்தாவைத் தவிர, ஏனைய மூன்று அணிகளான பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை அணிகள் மறை பெறுமான நிகர ஓட்ட சராசரியைக் கொண்டுள்ளன.

இவை வெற்றி பெறுவதுடன் பாரிய நிகர ஓட்ட சராசரியுடன் வெற்றி பெறவேண்டியது முக்கியமாகும். எவ்வாறாயினும் இந்த 4 அணிகளும் பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறுவதாயின் ஏனைய அணிகளின் வெற்றி தோல்விகளிலேயே தங்கியுள்ளமை குறிப்பிட்டுக் கூறவேண்டிய விடயமாகும்.