உலகக் கிண்ண இருபதுக்கு இருபது இரண்டு போட்டிகள் இன்று!

World Cup 1
World Cup 1

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 2021 இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் குழு 1 இலிருந்து அரை இறுதிக்கு செல்லும் அணிகளைத் தீர்மானிக்கும் கடைசி இரண்டு போட்டிகள் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கும் நடப்பு சம்பியன் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான போட்டி அபு தாபியில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளதுடன் அணிகள் நிலையில் அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்தை ஷார்ஜாவில் தென் ஆபிரிக்கா எதிர்த்தாடவுள்ளது.

இங்கிலாந்து ஏறத்தாழ அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துகொண்டுள்ள நிலையில், குழு 1 இல் அணிகள் நிலையில் 2 ஆம், 3ஆம் இடங்களில் உள்ள அவுஸ்திரேலியாவும் தென் ஆபிரிக்காவும் இரண்டாவது அணியாக அரை இறுதிக்குள் நுழைய கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போதைக்கு புள்ளிகள் மற்றும் நிகர ஓட்ட வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் குழு 1 இலிருந்து இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் அரை இறுதி வாய்ப்புகளைப் பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் ஆபிரிக்காவுக்கு மிக சொற்ப வாய்ப்பே காணப்படுகின்றது.

மேற்கிந்தியத் தீவுகளை அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தை தென் ஆபிரிக்காவும் மிகப் பெரிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிகொண்டால் நிகர ஓட்ட வேகம் அரை இறுதி அணிகளைத் தீர்மானிக்கும். எனினும் அது சாத்தியப்படும் என எதிர்பார்க்கமுடியாது.

இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் வெற்றிபெற்றால் அந்த இரண்டு அணிகளும் அரை இறுதி வாய்ப்புகளை எவ்வித சிக்கலுமின்றி  பெற்றுக்கொள்ளும். 

ஒருவேளை, இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் மிகச் சிறிய வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் இரண்டு அணிகளினதும் அரை இறுதி வாய்ப்புகள் உறுதிசெயப்படும்.. ஆனால் இந்த இரண்டு அணிகளும் தோல்வி அடையும் என கருதமுடியாது.

இதேவேளை, அரை இறதி வாய்ப்பை இழுந்துள்ள நடப்பு சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் இன்றை தனது கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியுடன் விடைபெறுவதற்கு முயற்சிக்கவுள்ளது.