வடமாகாண துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் “வடக்கு பிரிமியர் லீக்” சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04) காலை 9 மணியளவில் விருந்தினர்களை வரவேற்று மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடந்த மாதம் ஆரம்பித்த இச்சுற்றுப்போட்டியில் வடக்கை சேர்ந்த ஐந்து மாவட்டங்களின் அணிகள் பங்குபற்றியிருந்தன. இருபது பந்து பரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய யாழ் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அணிகள் இன்றையதினம் மோதிக்கொண்டன.
இப்போட்டியில் யாழ் கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்த்து முல்லை பந்தஸ் மோதியிருந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் கிளாடியேட்டர்ஸ் அணியினர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து இருபது பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 191 ஓட்டங்களை குவித்திருந்தது. அணி சார்பாக சூ.அஜித் -57, எஸ்.நிரோசன் -50 ஓட்டங்களை அணிக்காக எடுத்திருந்தனர்.
192 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய முல்லை பந்தஸ் அணியினர் மந்த கதியில் ஓட்டங்களை பெற்றிருந்த வேளை 53 ஓட்டங்கள் எடுத்த நிலையில் 12.3 பந்து பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 138 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தனர். யாழ் அணி சார்பில் பந்து வீச்சில் தெ.பிரதீப் -03 இலக்குகளையும், சூ.அஜித் -03 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தனர்.
முதலாவது இடத்தை பெற்ற யாழ் கிளாடியேட்டர்ஸ் அணியினர் இரண்டு இலட்சம் பணப்பரிசையும் கிண்ணத்தையும் சுபீகரித்திருந்தனர். ஆட்ட நாயகனாகவும் , தொடர் ஆட்ட நாயகனாகவும் யாழ் அணியின் வெற்றி பாதைக்காக 52 ஓட்டங்களையும் மூன்று இலக்குகளையும் கைப்பற்றிய சூரியகுமார் அஜித்தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதேவேளை இரண்டாம் இடத்தை பெற்ற முல்லை அணிக்கு ஒரு இலட்சம் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
வடமாகாண துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன் தலைமையில் பிரமாண்டமாக ஆரம்பித்த இப்போட்டியில் முதன்மை அதிதியாக இலங்கை துடுப்பாட்ட நிறுவனத்தின் தலைவர் சமி சில்வா, விஷேட விருந்தினர்களாக நிறுவனத்தின் பிரதிதலைவர் ரவீன் விக்கிரமரத்தின, இலங்கை அணியின் வேகப்பந்து விச்சாளர்களில் ஒருவரான விஷ்வ பராணாண்டோ, இலங்கை அணியின் சகலதுறை வீரரான பாணுக ராஜபக்ச, விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வடமாகாணத்திற்கான இணைப்பாளர் பாலித்த, வவுனியா தலமைை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு மற்றும் விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.