நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் வெற்றி வாகை சூடியது சென்னை சுப்பர் கிங்ஸ்!

6
6

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் நேற்றிரவு இடம் பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 10 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.

டுபாயில் இடம்பெற்ற ஐ.பி.எல் தொடரின் 18 ஆவது ஆட்டமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை பஞ்சாப் அணி பெற்றது.

பஞ்சாப் அணி சார்பில் அதன் தலைவர் கே.எல்.ராகுல் 63 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார். இதையடுத்து 179 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 181 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷேன் வொட்சன் 53 பந்துகளில் 83 ஓட்டங்களையும், ஃபாப் டுப்ளிஸிஸ் 53 பந்துகளில் 87 ஓட்டங்களையும் ஆட்டமிழக்கமால் பெற்றுக்கொடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 2 புள்ளிகளைப் பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மொத்தமாக 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தோல்வியடைந்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 2 புள்ளிகளுடன் இறுதி இடத்தில் உள்ளது. முன்னதாக நேற்று மாலை சன்றைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் சார்ஜாவில் இடம்பெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 34 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 6 புள்ளிகளைப் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல் புள்ளிப்பட்டியில் முதலிடத்தில் உள்ளது. தோல்வியடைந்த சன்றைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 7ஆம் இடத்தில் உள்ளது.