சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவ்னேஷ்வர் குமார் ஐ,பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2 ஆம் திகதியன்று சென்னை சுப்பர் கிங்ஸ் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை அணி 165 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
அந்த போட்டியில் ஐதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசினார். பரபரப்பான கட்டத்தில் போட்டியின் 19 ஆவது ஓவரை புவ்னேஷ்வர் குமார் வீசினார்.
முதல் பந்தை வீசும்போது அவரது கணுக்காலில் சற்று வலி ஏற்பட்டது. அதன்பின் உடனடி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு பந்து வீச முயன்றார்.
ஆனால், அவரால் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை. இதனால், அந்த போட்டியிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், கணுக்கால் மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து புவ்னேஷ்வர் குமார் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புவ்னேஷ்வர் குமார் விலகும்பட்சத்தில் நடப்பு ஐ.பி.எல். தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும்.
முதல் இரண்டு போட்டிகளில் தொடர் தோல்விக்குப்பின் தற்போது இரண்டு வெற்றிகள் பெற்றுள்ள ஐதராபாத் அணிக்கு, புவ்னேஷ்வர் குமாரின் விலகல் குறித்த தகவல் ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.