உக்ரைன் நாட்டில் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் பலி!

139423 fire breaks
139423 fire breaks

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் ஒரு மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்படும் போது மருத்துவமனையின் உள்ள மொத்தம் 33 பேர் சிக்கிக்கொண்டனர்.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் மருத்துவமனையில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதிரடியாக செயல்பட்ட மீட்புக்குழுவினர் மருத்துவமனையில் சிக்கியவர்கள் சிலரை காயங்கள் இன்றி மீட்டனர்.

ஆனால், இந்த தீ விபத்தில் 15 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். காயங்களுடன் மீட்கப்பட்ட அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விரைவாக விசாரணை நடத்தும்படி உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மின்சாதன கருவியை கவனக்குறைவுடன் கையாண்டதாலேயே தீ விபத்து எற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.