அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது.
வீடுகள், கார்கள், சாலைகள், மரங்கள் என அனைத்தும் உறை பனிக்குள் மூழ்கிக் கிடக்கின்றன.
குளிர் அதிகரிப்பதால் அங்கு மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், பனிப்பொழிவால் மின் கட்டமைப்பு முடங்கி உள்ளதால், தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த நான்கு நாட்களாக சுமார் 34 இலட்சம் மக்கள் மின்சாரமின்றி பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். மின் தடை காரணமாக பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
சாலைகளில் பனிக்கட்டிகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அங்கு கடும் குளிரால் இதுவரை 21 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்சாஸ் மாநிலத்திற்கு அவசர உதவிகளை உடனடியாக வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
டெக்சாஸில் இவ்வாறு பனிப்பொழிவு அதிகரித்ததற்கு பருவநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
குறிப்பாக ஆர்டிக் பகுதிகளில் வெப்பம் அதிகரித்ததன் காரணமாக இந்த அசாதாரண பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் வானியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.