ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
நேற்று மக்களவையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ரவிக்குமார் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் பதிலளிக்கையில்;
இந்தியக் குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
அந்தச் சட்டத்தின் பிரிவு 5ன் படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்தியக் குடியுரிமை பெற முடியும். அந்தச் சட்டத்தின் பிரிவு 6ன்படி இயல்புரிமை அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும்.
சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியாது என்று தெரிவித்தார்.