கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!

death child
death child

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இயற்கையாகவே நோய்த் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர் ஜெர்மனியின் பயோன்டெக், மாடர்னா ஆகிய இரு நிறுவனங்களும் உருவாக்கிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பெண் சுகாதாரப் பணியாளர் ஒருவர் தன்னுடைய பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு மாடர்னா எனப்படும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தியிருக்கிறார். தற்போது அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை பரிசோதித்ததில் குழந்தையின் உடலில் கொரோனாவுக்கான எதிர்ப்புசக்தி இயற்கையாகவே உருவாகியிருப்பது கண்டறியப்பட்ட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அப்பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு நோய்த் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு உருவான எதிர்ப்பு சக்தி தாயின் நஞ்சுக்கொடி வழியாக மற்ற ஊட்டச்சத்துகளுடன் சேர்ந்து கிடைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனாலும், இந்த எதிர்ப்பு சக்தி எவ்வளவு நாட்களுக்கு இருக்கும் என்பது தங்களுக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.