அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 531 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,871 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 42 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது.
இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 144 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 24 ஆயிரத்து 840 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,445 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 15 ஆயிரத்து 941 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.