உலக காலநிலை மாற்றத்திற்கு எதிராக, பாரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்கிலான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இணையவழி முறைமையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்த மாநாடு, நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் (Xi Jinping), ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ (Justin Trudeau), இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்ஸொனாரோ (Jair Bolsonaro) உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்களுக்கு, அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம், ஸ்கொட்லாந்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டிற்கான, ஒரு மைல் கல்லாக இந்த மாநாடு அமையும் என்று, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.