தடுப்பூசி கடவுச்சீட்டினை அமெரிக்கா வழங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாடுகளில் சர்வதேச பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு, அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விபரங்கள் அடங்கிய ‘தடுப்பூசி கடவுச்சீட்டினை’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பிரித்தானியாவில் இந்த திட்டத்தை மே மாதம் முதல் செயல்படுத்தவுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் பொரிஸ் ஜொன்சன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் தடுப்பூசி கடவுச்சீட்டினை வழங்காது என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாப்பதில் அமெரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஒவ்வொருவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது.
அமெரிக்க அரசாங்கத்திடம் தனிநபர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விபரங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் தடுப்பூசி விபரங்களை சேகரித்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அமெரிக்காவில் சர்வதேச பயணிகளுக்கு தடுப்பூசி கடவுச்சீட்டு வழங்கும் திட்டம் இல்லை என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.