ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 1,335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது. இதில், நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 785 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 89 சதவீதமாக இருந்து வருகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் காரணமாக ஓமனில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,798 ஆக அதிகரித்தது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 250 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறார்கள்.