ஜின்ஜியாங்கின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள உய்குர் இன சிறுபான்மையினர் மற்றும் பிற துருக்கிய முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் சீனா “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில்” ஈடுபட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் திங்களன்று வெளியிட்ட 53 பக்கம் கொண்ட அறிக்கையில் இது தொடர்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
இதில் கட்டாயமாக காணாமல் போனவர்கள், வெகுஜன கண்காணிப்பு, குடும்பங்களை பிரித்தல், சீனாவுக்கு கட்டாயமாக திரும்புவது, கட்டாய உழைப்பு, பாலியல் வன்முறை மற்றும் இனப்பெருக்க உரிமை மீறல்கள் ஆகியவையும் அடங்கும்.
ஸ்டான்போர்ட் சட்டப் பள்ளியின் மனித உரிமைகள் மற்றும் மோதல் தீர்க்கும் நிலையத்தின் உதவியுடன் எழுதப்பட்ட இந்த அறிக்கை, துருக்கிய முஸ்லிம்களை பீஜிங் ஒடுக்குவது “ஒரு புதிய நிகழ்வு அல்ல” என்றாலும், அது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மில்லியன் சிறுபான்மையின மக்கள் அரசியல் கல்வி முகாம்கள், முன்கூட்டிய தடுப்பு காவல் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகள் உட்பட 300 முதல் 400 நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகின்றது.
2017 ஆம் ஆண்டு முதல் பீஜிங் அதன் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தியபோது, சீனாவில் நடந்த அனைத்து கைதுகளில் ஜின்ஜியாங்கில் மாத்திரம் 21 சதவீதம் பதிவானது.
அது மாத்திரமன்றி 2017 முதல், சீன அரசாங்கம் இப்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு மசூதிகளை “சேதப்படுத்த அல்லது அழிக்க பல்வேறு சாக்குப்போக்குகளைப் பயன்படுத்தியுள்ளது.