ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை வழக்கில், முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரை, நீதிபதிகள் குழு குற்றவாளியாக அடையாளம் கண்டுள்ளது.
டெரெக் சௌவின் என்ற 45 வயதுடைய முன்னாள் காவல்துறை அதிகாரியே குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளார்.
ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ப்ளொய்ட், கடந்த ஆண்டு மே மாதம், மினியாபொலிஸ் வீதியில் வைத்து காவல்துறை அதிகாரி ஒருவரினால் கொல்லப்பட்டார்.
ஜோர்ஜ் ப்ளொய்ட் கைதுசெய்யப்பட்டதை அடுத்து, காவல்துறை அதிகாரி ஒருவர் சுமார் ஒன்பது நிமிடங்கள், அவரின் கழுத்தில், முழந்தாளிட்டு அழுத்தியிருந்தார்.
இந்த நிலையில், ஜோர்ஜ் ப்ளொய்ட் மரணித்தார்.
இது தொடர்பான காணொளி வெளியானதை அடுத்து, சர்வதேச ரீதியில் நிறவெறுப்பு மற்றும் காவல்துறையினர் தமது அதிகாரத்தை அதிகளவில் பயன்படுத்துகின்றமை தொடர்பில் பாரிய எதிர்ப்புக்கள் வெளியாகின.
இவ்வாறான பின்னணியில், சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் காவல்துறை அதிகாரியான டெரெக் சௌவின், மூன்று குற்றச்சாட்டுக்களின்கீழ் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தண்டனை பெறும்வரையில், தடுப்பில் வைக்கப்படவுள்ளதாகவும், பல தசாப்தங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.