இந்தியாவின் பல மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,29,942 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை 4,205 பேர் தொற்றினால் மரணித்துள்ளனர். இதற்கமைய இந்தியாவில் இதுவரை பதிவான கொவிட்-19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,50,000 கடந்துள்ளது.
கொவிட-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு, மராட்டியம், டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், அரியானா, பீகார், ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், இமாச்சல பிரதேசம், மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் முழுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குஜராத்தின் 36 நகரங்களில் ஒருவார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு சட்டம் நேற்று முதல் அமுலாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி வரை இந்த இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ளது.