பேய் ஓட்டுவதாகக்கூறி 7 வயது சிறுவன் அடித்துக்கொலை! தாய் உட்பட 3 பெண்கள் கைது!

9912murder16 2
9912murder16 2

தமிழ் நாட்டில் பேய் ஓட்டுவதாகக்கூறி  7 வயது சிறுவன் ஒருவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குறித்த சிறுவனின் தாய் உட்பட 3 பெண்கள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 7 வயது சிறுவன், சில காலம் நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் சிறுவனின் உடலில் பேய் இருப்பதாகவும், அதனை விரட்டுவதாகக் கூறி மூன்று பெண்கள் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர் என்றும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுவன் கீழே மயங்கி விழுந்துள்ளான்.

பின்னர் உறவினர்கள் சென்று சிறுவனை எழுப்பியபோது, அவன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சிறுவனுக்கு ஏற்பட்ட சாதாரண உடல் நலக்குறைவை பேய் பிடித்துள்ளதாகக் கூறி, தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த 3 பெண்கள் மீதும் காவல்நிலையத்தில் முறைப்பாடு  அளிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டுக்கமைய, அடிப்படையில் சிறுவனின் தாய் உட்பட 3  பெண்களை கைது செய்த காவல்துறையினர், உயிரிழந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில்,  சிறுவன் வலிப்பு வந்து இறந்துவிட்டதாக கைதான மூன்று பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்