கொவிட் மரணங்கள் அதிகளவில் பதிவான நாடாக அமெரிக்கா காணப்படுகின்றது. அங்கு கொவிட் தொற்றால் இதுவரை 620,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணரான வைத்தியர் அந்தோணி பாசி கூறியதாவது:-
‘அமெரிக்காவில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களில் 99.2% பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாவர். அத்துடன், இவர்களில் பெரும்பான்மையானவர்களின் மரணங்களை தவிர்த்திருக்க முடியும் என்பதால், இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என அவர் தெரிவித்தார்.
கொரோனாவுக்கு எதிராக நமக்கு திறன்மிக்க தடுப்புவழி ஒன்று காணப்படுகின்றது. எனினும் ஏன் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரியவில்லை.
உலகின் பல பகுதிகளில் தடுப்பூசிக்காக மக்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் செலுத்துவதற்கு தேவையான அளவு தடுப்பூசி அமெரிக்காவிடம் இருக்கிறது என்ற வகையில் நமது நாடு மிகவும் அதிர்ஷ்ட வசமானது.
எனினும், சிலர் தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விடயத்தில் மக்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.