ஆப்கானிஸ்தானின் முக்கிய தளமான பக்ரம் வான்தளத்தில் இருந்து, அமெரிக்க படையினர் முன்னறித்தலின்றி வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் அசதுல்லாஹ் கொஹிஸ்தானியை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அமெரிக்க படையினர் அங்கிருந்து வெளியேறியதாகவும், சில மணித்தியாலங்களின் பின்னரே ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் அதனை அறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தால், தலிபான் பயங்கரவாதிகள் வேகமாக முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் பக்ரம் தளத்தின்மீது தாக்குதல் நடத்துவார்கள் என ஆப்கானிஸ்தான் படையினர் எதிர்பார்ப்பதாக ஜெனரல் அசதுல்லாஹ் கொஹிஸ்தானி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள நேட்டோ மற்றும் அமெரிக்கப் படையினர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதியுடன் வெளியேறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், காபூல் விமான நிலையம் மற்றும் அமெரிக்க இராஜதந்திர நிலையம் என்பனவற்றின் பாதுகாப்புக்காக 1,000 துருப்பினர் வரையில் நிறுத்தப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படையினர் வெளியேறும்போது, அனைத்து வெளிநாட்டுப் படையினரும் வெளியேறிவிட வேண்டும் என்று தலிபான் பயங்கரவாதிகள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.