தாலிபான் பயங்கரவாதிகளினால் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய தாக்குதல்கள் காரணமாக இன்று மேலும் இரண்டு மாகாண தலைநகரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நான்கு மாகாண தலைநகரங்கள் ஆப்கானிஸ்தானிய இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்டு, தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.
இதுவரை காலமும் தாலிபான் பயங்கரவாதிகள் கிராமபுற பிரதேசங்களையே கைப்பற்றி வந்தனர்.
தற்போது நகர பிரதேசங்களை நோக்கி தமது தாக்குதல்களை அதிகரித்துள்ளனர்.
நகரங்கள் கைப்பற்றியது தொடர்பாக தாலிபான்களினால் அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
கடும் சமருக்கு பின்னர் மாகாண தலைநகரங்கள் தமது முஜாஹிடின் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட தலை நகரங்களில் உள்ள அரச கட்டடங்கள் உள்ளிட்ட சகல அரச சார்பான நிறவனங்களும் தமது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் நிலைகொண்டிருந்த ஆப்கானிஸ்தானிய படைகள் மற்றும் அதிகாரிகள் பின்வாங்கி சென்றுள்ளதாக அங்குள்ள வெளிநாட்டு செய்தி ஸ்தாபனங்கள் குறிப்பிட்டுள்ளன.