ஆப்கானிஸ்தானில் உள்ள சகல பிரித்தானிய பிரஜைகளும் இன்றுடன் முற்றாக அகற்றப்படுவர் என பிரித்தானிய பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் பென் வொலஸ் தெரிவித்துள்ளார்.
எஞ்சியிருந்த சுமார் ஆயிரம் பிரித்தானியர்களையும் அங்கிருந்து அகற்றும் செயல்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்குள்ள சில இராணுவ தளபாடங்கள் அழிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளமான ஜேர்மனியில் உள்ள ரம்ஸ்ரீனுக்கு ஆயிரக்கணக்கான ஏதிலிகளாக்கப்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் சென்றடைந்துள்ளனர்.
பல குடும்பங்கள் பிரிந்துள்ளதுடன் பல சிறுவர்கள் மாத்திரம் தனியாக வந்திறங்கியுள்ளனர்.
சுமார் 10 நாட்கள் அவர்கள் அந்த தளத்தில் வைத்து பராமரிக்கப்பட்டதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
ஏற்கனவே 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஏதிலிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காபூலில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை குண்டு தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.கே. உரிமை கோரியுள்ளது.
இதேவேளை இரட்டை குண்டு வெடிப்பில் தாலிபான்கள் எவரும் பலியாகவில்லை என தெரிவித்துள்ள அதன் பேச்சாளர் குறித்த சம்பவம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலேயே இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த தாக்குதல்களில் 28 தாலிபான் ஆயுததாரிகள் பலியாகியதாக முன்னர் வெளிநாட்டு செய்தி ஸ்தாபனங்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.