காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு மனிதாபிமானத்தின் திருப்புமுனையாகும் – பொறிஸ் ஜோன்சன்

download 1 22
download 1 22

உலக தலைவர்களுக்கு இடையிலான காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாடு, மனிதாபிமானத்தின் திருப்புமுனையாகும் என பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புவி வெப்பமயமாதல் ஏற்கனவே தவிர்க்க முடியாததொன்றாக உள்ளது. இந்த நிலையில், வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான பாரிய மாற்றங்களை மேற்கொள்ள உலகின் ஏனைய தலைவர்களுக்கும், பிரித்தானிய பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். நிலக்கரி, மகிழுந்து, பணம் மற்றும் மரங்கள் முதலான நான்கு விடயங்களையும் சமாளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலக காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம், 12 ஆம் திகதிவரை ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.